வெளிநாடுகளுக்கான கோதுமை ஏற்றுமதியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்தியா தடை செய்துள்ளது.
உலகிலேயே அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
கோதுமை ஏற்றுமதியில் முதலிடத்தில் இருந்த உக்ரைனில் போர் காரணமாக கோதுமை ஏற்றுமதி முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் உலக அளவில் இந்தியாவின் கோதுமைக்கு கேள்வி அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 14 இலட்சம் தொன்னாக உயர்ந்தது.
இவ்வாறான நிலையில் உள்நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு உடனடி தடை விதித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோதுமை ஏற்றுமதிக்கு உடனடி தடை அமுலாகிறது. இருப்பினும், மே 13 ஆம் திகதிக்கு முன்னதாக கோதுமை ஏற்றுமதி ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், அவற்றின்படி மட்டும் ஏற்றுமதிகள் அனுமதிக்கப்படும் என இந்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகள் கோதுமை கோரியிருந்தால், மத்திய அரசு அனுமதியுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கோதுமை ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா மோதலால் சர்வதேச அளவில் கோதுமைக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகள் பலவும் கோதுமை சீராகக் கிடைக்காமல் சிக்கலில் உள்ளன. இந்நிலையில் உள்நாட்டில் உணவுப் பாதுகாப்பு, தேவையை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் கோதுமையின் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.